Sunday 22 December 2013

0 வேதனையும் சாதனையும்

augustin jebakumar

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
ஸ்திரியானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள், பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். யோவான் 16:20,21 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்ற வசனம் இன்றய நாட்களில் அநேக சுவிசேஷ கூட்டங்களில் பிரசங்கிக்கப்படுகின்றது.

 ‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ என்று சொன்ன இயேசு, அந்த துக்கம் எப்படி சந்தோஷமாக மாறும் என்பதையும் எடுத்துக்காட்டுடன் கூறத் தவறவில்லை. இன்றைய சுவிசேஷ உலகத்தில் தாராளமாய் நடக்கின்ற காரியம், நமக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு, மீதமானவைகளைத் தள்ளிவிடுவதே. ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்ற வசனத்தை ஏறக்குறைய எல்லாருடைய வீடுகளிலும் நாம் காணமுடியும், ஆனால், ‘நீங்கள் பண ஆசை இல்லாதவர்களாய், போதுமென்றிருங்கள்’ என்ற வசனத்தை நாம் மறந்துவிடுகின்றோம். 

நாம் பண ஆசையில்லாதவர்களாய் போதுமென்ற மனதுடன் இருக்கும்போது, அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மைக் கைவிடுவதுமில்லை என்பதே அந்த வசனத்தின் முழுமையான அர்த்தம். ஆனால், நமக்கோ மேலே உள்ள வார்த்தைகள் பிடிக்காததினாலேயே கீழே உள்ளவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். இதைப்போலவே ‘நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன.;’ (மத்தேயு 28:19,20) என்ற வசனத்திலும் ‘இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, முன்னாக நிற்கிற இயேசுவின் கட்டளைகளை நாம் மறந்துவிடுகின்றோம். நமக்கு எப்போதுமே நல்ல பகுதிகள் தான் வேண்டும்.

மீன் சாப்பிடும்போது முள்ளை எடுத்துவிட்டு சதையை மட்டும் சாப்பிடுவதைப்போலவே நாம் வசனத்தையும் சாப்பிடுகிறோம். நமக்குத் தேவையான, சாதகமான மற்றும் ஆசீர்வாதமானவைகளை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுகின்றோம்.

புதியவை உருவாக புடமிடப்படுவோம்
‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ என்று சொன்ன இயேசு ஒரு கர்ப்பவேதனைப்படுகின்ற ஸ்திரியையும் உடன் எடுத்துக்காட்டுகிறார். கர்ப்பவேதனை எல்லா ஸ்திரிகளுக்கும் நியமிக்கப்பட்ட ஒன்று. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எப்படிப்பட்ட உடல்நிலையிலிருந்தாலும் சரி கர்ப்ப வேதனையை பெண்கள் அனுபவித்தேயாகவேண்டும். இதற்குத் தப்பிச் செல்ல வழியில்லை. ஏதேனில், தேவ கட்டளையை மீறிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் தண்டனை அளித்தபோது, ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். 

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஏவாளை நோக்கி: ‘நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்’ ஆதி 3:16 என்றார். முதல் தாயாம் ஏவாளுக்கு அன்று தேவன் கொடுத்த தண்டனையையே இன்று பூமியிலுள்ள எல்லா பெண்களும் அனுபவிக்கின்றார்கள். புதிய காரியம் உருவாகவேண்டுமென்றால் வேதனையை நாம் சகித்தேயாகவேண்டும். நமது குடும்பமானாலும் சரி, ஊழியமானாலும் சரி புதிய காரியங்கள் உருவாகும்போது வேதனைகளுக்கு நாம் விலகியோடக் கூடாது. 

இன்றைய நாட்களில் ஜனங்களின் விருப்பமெல்லாம் வேதனையில்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் எல்லாம் நடக்கவேண்டும் என்பதே. நான் சிறுவனாயிருந்தபோது மருத்துவமனைகளில் 1000 ல் ஒரு நபருக்குத்தான் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பார்கள். ஆனால் இப்போதோ 1000 ல் ஒரு நபருக்குத்தான் இயற்கையான பிரசவம் நடக்கிறது, மற்றவர்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சைதான். அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் கூட பிரசவ வேதனையை ஸ்திரிகள் அனுபவித்தேயாகவேண்டும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரசவவேதனை ஸ்திரிகளுக்காக வைக்கப்பட்டதே.


புதிதாக ஒன்றை நாம் பெறவேண்டுமென்றால் வேதனையின் வழியாக நாம் கடந்து செல்லவேண்டிய அவசியமும் உண்டு. ஊழியத்தின் பாதையில் நாம் வேதனையையோ, நெருக்கத்தையோ அனுபவிப்போமென்றால் புதிதாக ஒரு காரியம் உண்டாகப்போகிறது என்றே அர்த்தம். குடும்ப வாழ்க்கையிலோ அல்லது தொழில் துறைகளிலோ நாம் வேதனைகளை அனுபவிக்கும்போதும் இந்த சத்தியத்தை உணரத் தவறக்கூடாது. நம்முடைய வாழ்க்கையில் வேதனை உண்டாகும்போது, புதிதாக ஒன்று உண்டாகப்போகின்றது என்ற நம்பிக்கையே நம்மில் உருவாகவேண்டும்.

இந்தியாவிலே தேவன் புதிய காரியத்தைச் செய்வதற்காக சபை நெருக்கப்படலாம், ஒடுக்கப்படலாம், பற்பல நிலைகளில் துக்கங்களையும் துன்பங்களையும் சந்திக்கலாம், உபத்திரவத்தின் பாதையில் சபை கடந்துசெல்லலாம். இவை எல்லாம் புதிய காரியங்களை உருவாக்க தேவன் அனுமதிப்பவைகளே. சபை இந்த காரியங்களைக் கடந்துசெல்லும்போது தேவன் புதிய காரியங்களை உருவாக்குவார். “Where there is no pain, there is no gain”. வேதனையில்லாமல் வாழ்க்கை இல்லை என்று நாம் கற்றுக்கொடுக்கப்படாதபடியினாலேயே, எங்கேயாவது போய் யாரையாவது தலையில் கைவைத்து வேதனையில்லாமல் எதையாகிலும் செய்துவிடுவார்களா என்று நாம் தினமும் துடிக்கின்றோம். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும் என்றால் நாம் வேதனை அனுபவித்தேயாகவேண்டும். இந்த சூத்திரத்தை நாம் ஒருக்காலும் மாற்ற இயலாது.

விழுங்க வரும் சத்துரு
தேவ திட்டங்களுக்கு விரோதமாய் செயல்படுவதே சத்துருவின் தலையாய நோக்கம். புதிய காரியம் வரும்போது யார் சுறுசுறுப்பாக மாறிவிடுகிறார்கள். எழுப்புதலின் காரியம் சபையில் வெடித்தெழும்பும்போது யார் வேகமாக செயல்படுகிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். தேவன் நம்முடைய வாழ்க்கையில் புதிய காரியங்களைச் செய்ய ஏதுவாய் நம்மை நடத்தும்போது, சத்துருவும் நமக்கு விரோதமாய் தனது தந்திரமான வலையை விhpக்க ஆயத்தமாகிறான். நம்மிடத்தில் தோன்றும் புதிய காரியங்களை குலைத்துப்போடவும், அதனை தடுத்து நிறுத்தவும் அநேக தந்திரங்களையும் உபாயங்களையும் சத்துரு செய்ய முற்படுகின்றான்.

அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஒரு ஸ்திரி சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து பிரசவ வேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன்தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று, பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரி பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. வெளிப்படுத்தல் 12:1-4 இந்த அதிகாரத்தில் ஒரு பெண்னையும் ஒரு ஆண் குழந்தையையும் குறித்து நாம் வாசிக்கின்றோம். அநேக வேத பண்டிதர்கள் பலவிதமாக இந்த வசனங்களுக்கு விளக்கமளிக்கின்றனர். ஸ்திரியை சபை என்றும் ஆண் பிள்ளையை சபையிலிருந்து வெளிப்படுகின்றவர்கள் என்றும் கூறுவோர் உண்டு. ஸ்தி்ரியை யூதர்களுக்கு அடையாளமாக பேசுகிறவர்களும் உண்டு. இந்த வசனங்களில் நாம் ஒரு காரியத்தை நன்றாக கவனிக்கவேண்டும். 

ஸ்திரி சூரியனை அணிந்திருந்தாலும், சந்திரனை தன் காலின் கீழே வைத்திருந்தாலும், சிரசின் மேலே பன்னிரெண்டு நட்சத்திரங்களை வைத்திருந்தாலும் அவளுக்கும் கர்ப்பவேதனை உண்டு என்பதை வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. கர்ப்பவேதனை வந்தபோது அவள் துடிக்கிறாள், முன்னேயோ வலுசர்ப்பமாகிய பிசாசு ஆயத்தமாக நிற்கிறான். புதிதாக ஒரு காரியம் நம்மில் உருவாகும்போது பிசாசு நம்மை விழுங்க ஆயத்தமாயிருக்கின்றான்.

 நட்சத்திரத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் வாலினால் இழுத்துப் போடக்கூடிய சத்துவம் படைத்த பிசாசு நம் முன்னாக வந்து நின்றாலும், தேவன் விரும்புகின்ற காரியத்தை பிரசவிக்க நாம் ஆயத்தமாயிருக்கும்போது நம்மை விழுங்கிப்போடுவதற்கோ, தொடுவதற்கோ சத்துருவிற்கு நம்மேல் எந்த அதிகாரமும் இல்லை. சபையை அல்ல சபையிலிருந்து புறப்படுகின்ற காரியங்களை விழுங்கவே, அவைகளை அழித்துப்போடவே சத்துரு ஆயத்தமாயிருக்கின்றான்.

சபை ஆளுவோரை பிறப்பிக்கட்டும்
கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம். நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம், தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம், பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை. ஏசாயா 26:17,18 பாடுபட்டும், வேதனைப்பட்டும் காற்றையே பெற்றெடுத்த ஸ்திரியைப் போலவே நாங்கள் இருக்கின்றோம் என்று தேவனிடத்தில் முறையிடுகின்ற ஒரு கூட்டத்தாரை இந்த வசனங்களில் நாம் காணமுடியும். 

இன்றைக்கு சபையில் நடக்கின்ற காரியமும் இதுதான். அநேக சபைகள் ஆளுகிறவர்களைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக காற்றையே பெற்iறெடுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் பாடுபட்டால் மாத்திரம் போதாது, ஆளுகிறவர்களையும் பெற்றெடுக்கவேண்டும். இருப்புக்கோலால் உலகத்தை ஆளுகிற ஆண்பிள்ளைகளை பெறவேண்டிய சபை, உலகத்தை ஆள்பவர்களை உருவாக்கவேண்டிய அநேக சபைகள் இன்றய நாட்களில் காற்றைப் பெற்றுக்கொண்டிருப்பது வேதனையான காரியமே. சபை இருப்புக்கோலால் ஆளுகிறவர்களை உருவாக்கவேண்டும், காற்றைப் பெற்றவர்களைப்போல சபை காட்சியளிக்கக்கூடாது.

இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள் பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலன் இல்லை. ஏசாயா 37:3இயேசுவைப் போலவே இவ்வுலகத்தின் இருளை அகற்றுவதற்கும், இந்த உலகத்தை ஆளுவதற்குமே நாம் பிறந்திருக்கிறோம். இருளை அகற்ற ஒரு மெழுகுவர்த்தி போதுமானது, ஆனால், அந்த மெழுகுவர்த்தி தன்னை அழித்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கவேண்டும். ஓரு மனிதனை சபை உருவாக்கினாலும் அவனை எரியவைத்து,

 உருகவைத்து, வெளிச்சங்கொடுக்க வைத்து இந்த உலகத்தினுள் அனுப்புமானால் இந்த உலகத்தின் இருளை சபை அகற்றிவிடமுடியும். அநேக சபைகளுக்கு இந்த வாஞ்சை உண்டு, கதறுகிறார்கள், துடிக்கிறார்கள் ஆனால் பெறவோ அவர்களுக்கு பெலனில்லை.
இன்றைய நாட்களில் உலகத்தின் பெரிய இருளை அகற்றுவதற்கு ஒரு மெழுகுவர்த்தி தனக்கு பெலனில்லாமலிருக்கலாம், ஆனால் தன்னை அழிக்க அது ஆயத்தமாயிருக்குமானால் இந்த இருளை அகற்ற அந்த மெழுகுவர்த்திக்கு பெலன் உண்டு. நம்முடையவைகளை அழித்து தேவனுக்காய் பற்றி எரியவேண்டிய நாட்களுக்குள்ளாக நாம் கடந்து வந்திருக்கின்றோம். யோவானைக் குறித்து ‘அவன் எரிந்து பிரகாசிக்கிற வெளிச்சமாயிருந்தான், அவனுடைய வெளிச்சத்தில் நீங்களும் நடக்க மனதாயிருந்தீர்கள’ என்றே வேதம் சொல்லுகின்றது. 

யோவான் கொஞ்ச காலம் மட்டுமே இவ்வுலகத்தில் வாழ்ந்தான், ஆனால் நானூறு ஆண்டுகளாக தேவ சத்தம் கேட்காமல் இருந்த இருட்டை அவன் அகற்றிவிட்டதோடு ஆண்டவருக்கு வழியையும் அவன் ஆயத்தப்படுத்திவிட்டான். வனாந்தரமோ, வாழ்க்கையின் பாடுகளோ அவனது ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தவில்லை. இருளைக் கண்டு நாம் அஞ்சிவிடவேண்டாம், யோவான் ஸ்நானகனைப்போல எரிந்துபிரகாசிக்க நாம் ஆயத்தமென்றால் இவ்வுலகத்தின் இருளை நாம் எளிதில் அகற்றிவிட முடியும்.
இருளை அகற்ற ஒரு மெழுகுவர்த்தி போதுமானது, ஆனால், அந்த மெழுகுவர்த்தி தன்னை அழித்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கவேண்டும்.

மகிமை போய்விட்டதே!
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறை கர்ப்பிணியாயிருந்தாள். அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டுக் குனிந்து பிரசவித்தாள். அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள் நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள். அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தை வைக்கவுமில்லை. 1 சாமுவேல் 4:19,20 சபையிலிருந்து ஆளுவோர்கள் எழும்புவதை பொறுத்துக்கொள்ளாதோரும் உண்டு, ஆண் பிள்ளையை நீ பெற்றிருக்கிறாய் என்று அவளுக்கு அறிவிக்கப்பட்டபோதும் பினேகாசின் மனைவி அந்தப் பிள்ளையின்மேல்; அக்கறை காட்டவில்லை, குழந்தை பிறந்ததை நினைத்து சந்தோஷப்படவுமில்லை; மாறாக அதற்கு ‘இக்கபோத்’ என்றே பெயரிட்டாள். 

இக்கபோத் என்றால் தேவ மகிமை கடந்துபோய்விட்டது என்றே அர்த்தம், சபைகளில் ஆளும் ஆண்மக்கள் உருவாகிவிட்டால், தேவ மகிமை இன்னொருவருக்கு கடந்துபோய்விடுமே என்று அஞ்சுவோரும் சபையில் உண்டு. நாம் இந்த உலகத்தை ஆளும் மக்களை உருவாக்கும் ஆலயம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். தேவ மகிமையை நாம் இந்த உலகத்திற்கு காண்பிக்கவேண்டும். என்னைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெனுண்டு என்ற வைராக்கியம் இன்று நமக்குள் உருவாகவேண்டும்.

பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் பறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து, பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள். அவன் தகப்பனோ, அவனுக்கு பென்ஜமீன் என்று பேரிட்டான். ஆதி 35:16,17,18 தேவன் ராகேலை நினைத்தருளினார். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். ஆதி 30:22-24 கெத்சமெனேயின் சிலுவையும் பாடுகளும் இல்லாமல் உயிர்த்தெழுதலின் ஈஸ்டர் இல்லை.

ராகேல் யோசேப்பை பெற்றபோது, அவளுக்கு இருந்த விசுவாசம் கர்த்தர் இன்னும் ஒரு குமாரனை எனக்குத் தருவார் என்பதே. அவள் யோசேப்பை பெயர் சொல்லிக் கூப்பிடும் போதெல்லாம் அவளது மனம் இன்னும் ஒரு குமாரனை கர்த்தர் எனக்குத் தருவார் என்றே சொல்லியிருக்கும். ராகேலுடைய விசுவாச வார்த்தைகளே அவளுக்கு இன்னுமொரு குமாரனை உருவாக்கிவிட்டது. ஆனால் பிரசவ காலம் வந்தபோதோ அவனுக்கு பெனானி (Son of Sorrow) வேதனையின் மகன் என்று அந்தக் குழந்தைக்குப் போpட்டாள். யாக்கோபு லாபானைவிட்டு ஓடிப்போகிறபோது, லாபான் ஏன் இப்படிச் செய்தாய் என்று யாக்கோபிடம் கேட்டதற்கு ‘நீர் அனுப்பமாட்டீர் என்பதினாலேயே இப்படிச் செய்தேன்’ என்று சொன்னான். லாபானோ என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று யாக்கோபைக் கேட்டதற்கு, உம்முடைய தெய்வம் எவனிடத்தில் காணப்படுகிறதோ அவன் கொலைசெய்யப்படக்கடவன் என்று ஆவேசமாக கூறினான். யாக்கோபின் வார்த்தைகள் அவனது மனைவிக்கே வந்து பலித்தது. இந்த வார்த்தையினிமித்தம் ராகேல் மரணத்தருவாயிலிருந்தபோது தான் பெற்ற ஆண் பிள்ளையைப் பார்த்து என் துக்கத்தின் மகன் என்றே பெயரிட்டாள். நம்மிலிருந்து உருவாகும் புதிய காhpயங்களை நாம் எப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம். ஏலியின் மருமகளைப் போல அதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோமோ? கெத்சமெனேயின் சிலுவையும் பாடுகளும் இல்லாமல் உயிர்த்தெழுதலின் ஈஸ்டர் இல்லை.
உருவாக்கியவருக்கு ஒரே நாள் போதுமானது
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப் பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரைப் பெற்றும் இருக்கிறது. பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கா்த்தா; சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறர்;. ஏசாயா 66:8,9 நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் புதிய காரியத்தை நம்முடைய சொந்த வாழ்க்கையிலும், ஊழியத்தின் பாதையிலும், குடும்ப வாழ்க்கையிலும் செய்ய தேவன் விரும்புகின்றார். பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் தடுப்பேனோ என்று தேவன் முழக்கமிடுகின்றார். தேவன் உருவாக்கும் எழுப்புதலை தடைசெய்ய இந்த உலகத்தின் எந்த மனிதனாலும் இயலாது. ஒரே நாளிலே சீயோனை வேதனைக்குள்ளாக்கி குமாரர்களை பிறப்பிக்கச் செய்வது தேவனுக்கு எளிதான காரியம். அதற்கு தேவன் விரும்புவதும், எதிர்பார்ப்பதும் நம்முடைய ஆழமான அர்ப்பணிப்பையே. மரியாளின் மேல் பரிசுத்த ஆவியானவர் அன்று நிழலாடியதுபோல இன்றும் நம்மேல் அசைவாட அவர் போதுமானவர். தேவதூதன் மரியாளுக்குப் பிரதியுத்தரமாக: ‘பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்’ என்று கூறியதுபோல, நம்மிடத்திலும் புதிய காரியங்களை உருவாக்கி அவைகளைக் கொண்டு இவ்வுலகத்தை சுவிசேஷத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதே தேவதிட்டம். முழு தேசத்திலும் எழுப்புதலைக் கொண்டுவர தேவனுக்கு ஒரே நாள் போதுமானது. சபையின் காரியங்களிலோ, ஊழியத்தின் காரியங்களிலோ புதிய காரியங்களைச் செய்ய தேவனுக்கு ஒரே நாள் போதுமானது. தேவனே எழுப்புதலின் நாயகர். அவருடைய கரங்களில் புதிய காரியங்களை பெற்றெடுக்க நம்மையும் நம்முடைய வாழ்க்கையையும் நாம் அர்ப்பணிப்போமென்றால், தேவன் நம்மைக்கொண்டு தேசத்தில் பெரிய அசைவை உண்டுபண்ண முடியும். போலியான எழுப்புதல் அல்ல, காற்றைப் பெற்றவர்களைப் போலல்ல. நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை தனது வாலினால் இழுத்துத் தள்ளும் சாத்தானையும் நிலை குலையப் பண்ணுகிறவர்களைப் பிறப்பிக்க நான் எந்த வேதனையையும், பாடுகளையும் சோதனையையும், துக்கங்களையும் பொறுத்துக்கொள்ளவும், அவைகளைத் தாங்கிக்கொள்ளவும், புதிய காரியங்களில் உருவாக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று அர்ப்பணிப்போரே தேவனுக்கும், சபைக்கும் இன்றய தேவை.

 சகோ. அகஸ்டின் ஜெபக்குமார்

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.