Sunday 22 December 2013

0 விசுவாசத்தின் விலைக்கிரயம் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்


Augustin Jebakumarநாம் விசுவாசத்திற்காக இன்னும் விலைக்கிரயம் செலுத்தவேண்டியது அவசியமா? நாம் இரட்சிக்கப்படுவதற்கென்று விலைக்கிரயம் செலுத்துவதில்லை. நமது நற்கிரியைகளின் மூலமாக நாம் இரட்சிக்கப்படவில்லை, விசுவாசத்தினாலேயே நாம் கிறிஸ்துவின் இரட்சிப்பை நமது வாழ்வில் பெற்றுக்கொண்டோம்.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீ்ர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு’ (எபேசியர் 2:8). நாம் இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தினால் தேவனுடைய ஈவாகிய இரட்சிப்பைப் பெற்றிருந்தாலும், தேவன் நம்மை இன்னமும் ஒரு படி அதற்கு மேலே எடுத்துச்செல்ல விரும்புகிறார். எப்படிப்பட்ட நிலையிலிருக்கும் மனிதராயிருந்தாலும், யாராயிருந்தாலும் விசுவாசத்தினால் இரட்சிப்பை தனது வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் மரிப்பதற்கு முன்னதாகஆண்டவரே, நீர்; உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ (லூக்கா 23:42) என்று இயேசுவினிடத்தில் சொன்னபோது அவன் இரட்சிப்பை பெற்றுக்கொண்டான்;. ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்’ (லூக்கா 23:42) என்று இயேசு அவனுக்கு பிரதியுத்தரம் சொன்னார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் இயேசுவை தேவனுடைய குமாரனாக மாத்திரமல்ல, வரப்போகின்ற ராஜ்யத்திற்கு செல்வதற்கான இரட்சிப்பைத் தருகிறவர் என்பதையும் அவரே வழி என்பதையும் அவன் அறிந்துகொண்டான். எனவே அவன் அவரை ராஜாவாகப் பார்த்துநீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்துக்கொள்ளும்என்று விண்ணப்பம் செய்தான். இரட்சிக்கப்படுவதற்கு விசுவாசம் அவசியமானதே இதை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். ஆனால் விசுவாசத்தினாலே இரட்சிப்பை பெற்ற நாம் இன்னமும் பிரதானமான இடத்தையும் விசுவாசத்தினால் பெறவேண்டும் என்று தேவன் விருப்பமுடையவராயிருக்கின்றார்.

இன்றும் பேசும் ஆபேலின் இரத்தம்

விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். எபிரேயர் 11:4
சகோதரர்களான ஆபேல், காயீனைக் குறித்து நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம். ஆபேலும் தேவனுக்கு காணிக்கை செலுத்தும்படி வந்தான். காயீனும் தேவனுக்கென்று காணிக்கை செலுத்தும்படியாக வந்தான். ஆபேல் விசுவாசத்தின்மேல் நம்பிக்கை வைத்தவனாக பலியிட வந்தான். ஆனால் காயீனோ தனது பெலத்தின்மேல் நம்பிக்கையுள்ளவனாக பலியிட வந்தான். ஆபேல் தான் பெற்ற வெளிப்பாடோடு கூட பலி செலுத்த வந்தபோது அவன் விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயிருந்தது. அவனுடைய ஜீவனையே கொடுக்கும்படியாக அவனது ஆராதனை அமைந்தது. காயீனும், ஆபேலும் தேவனுக்கு ஆராதனை செய்ய வருமுன்னதாக தங்கள் தங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். ஆபேல் ஆடுகளை மேய்கிறவனாயிருந்தான், காயீன் நிலத்தை பயிரிடுகிறவனாகக் காணப்பட்டான். இருவருடைய வேலைகளில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. ஆனால், எப்போது அவர்கள் இருவரும் பலி செலுத்த வந்தார்களோ அப்போது ஆபேல் தன்னுடைய ஜீவனை கொடுக்கும்படியாக அந்த ஆராதனை அமைந்துவிட்டது. ஆபேல் எந்த தவறும் செய்யவில்லை. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார் (ஆதி 4:4) கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தபடியினால் ஆபேல் தன் ஜீவனைக் கொடுக்கவேண்டியதாயிற்று.

தேவன் தான் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார். எனது காணிக்கை அங்கீகரிக்கப்பட்டுவிட்டது உனது காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆபேல் காயீனிடத்தில் சொல்லவில்லை. தேவன் என்னை ஏற்றுக்கொண்டார் உன்னையும் உனது காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று காயீனை குறைத்துப்பேசவுமில்லை. ஆனாலும், தனது காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்பதைக் கண்ட காயீன் ஆபேலை கொன்றுவிட்டான். ஆபேலின் உண்மையான ஆராதனைக்கு அவன் விலைக்கிரயமாய் செலுத்தியது அவனது உயிரையே.

காயீன் ஆபேலைக் கொன்றபோதிலும் அவனது இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டதாக நாம் வேதத்திலே காண்கின்றோம் (ஆதி 4:10). ‘நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகாpயாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்’ (மத்தேயு 23:35) என்று ஆபேலைக்குறித்து இயேசுவும் குறிப்பிடுகின்றார். எபிரேய ஆக்கியோன்ஆபேல்; மரித்தும் இன்னும் பேசுகிறான்’ (எபி 11:4) என்று எழுதுகிறார். இத்தகைய உயர்வான ஸ்தானம் ஆபேலுக்கு எப்படி கிடைத்தது? அவன் தனது வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்தியபோதே இந்த உயர்வான ஸ்தானம் அவனுக்கு கிடைத்தது. ஆறாயிரம் வருடங்கள் சென்றபின்னும் இன்னும் ஆபேல் பேசிக்கொண்டிருக்கின்றான்.

அநேக நேரங்களில் நான் ஏன் என்னுடைய வாலிபத்தை கர்த்தருக்காக இப்படியாக செலவழிக்கவேண்டும்? நான் ஏன் என்னுடைய பொருட்களை அவர் பணிக்கென்று தியாகம் செய்யவேண்டும்? ஏன் நான் என்னுடைய சுகத்தை மற்றோருக்காக தியாகம் செய்யவேண்டும்? நான் ஏன் பாடுகளை அனுபவிக்கவேண்டும்? மற்றவர்களைப்போல நானும் ஏன் வாழக்கூடாது? மற்றவர்களைப்போல சாதாரணமாக கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்தால் நான் பரலோகம் செல்லமுடியாதா? நான் ஏன் விலைக்கிரயம் செலுத்தவேண்டும்? என்ற இப்படிப்பட்ட கேள்விகள் நம்முடைய மனதில் உதயமாவதற்கான வாய்ப்புகள் உண்டு. விலைக்கிரயம் செலுத்தவேண்டியது அவசியமா, அப்படி செலுத்துவதினால் என்ன இலாபம் நாம் கேட்போமானால் மேன்மையான ஸ்தானங்களை இழந்துவிடுவோம். இன்றுவரை ஆபேல் பேசிக்கொண்டிருக்கிறான். விசுவாசத்தினாலே உண்மையான காணிக்கையை செலுத்திய ஆபேல் விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயிருந்தது. நம்முடைய நேர்மையான வாழ்க்கையின் நிமித்தமோ, நமக்கு கிடைத்திருக்கின்ற வெளிப்பாடுகளின் நிமித்தமாகவோ ஒருவேளை நாம் விலைக்கிரயம் செலுத்தவேண்டியிருந்தால், அது நம்மை நிச்சயம் உயர்ந்த ஸ்தானத்திலேயே கொண்டுபோய் அமர்த்தும்.

வெளிப்பாட்டைப் பெற்ற நோவா

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரேயர் 11:7
நோவாவிற்கு தேவன் வரப்போகின்ற அழிவைக்குறித்ததான வெளிப்பாட்டைக் கொடுத்தார். நோவாவின் நாட்களில் ஜனங்கள் புசித்து, குடித்து தங்கள் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அந்நாட்களில் நோவாவிற்கோ, நான் இருக்கின்ற இந்த பூமி அழியப்போகின்றது, தேவன் புதிய காரியத்தை செய்யவிரும்புகிறார் என்பதைக் குறித்த வெளிப்பாடு கிடைத்தது. நோவா காணாதவைகளைக் குறித்து தேவனால் எச்சரிப்புப் பெற்றான். அதற்காக நோவா விலைக்கிரயத்தையும் செலுத்தவேண்டியதாயிருந்தது.

நோவாவின் காலத்தில் மக்கள் தங்களுடைய வீடுகளைக் கட்டுவதிலேயே கவனமாயிருந்தார்கள். ஆனால், நோவாவும் அவனது குடும்பத்தினரும் இணைந்து விசுவாசிக்கிற மக்களுக்காகவும், பறவைகள் மற்றும் விலங்குகளைக் காப்பாற்றவும் பெரிய பேழையை உண்டாக்கினார்கள். இரவு பகலாக அவன் வேலை செய்தான். வாழ்க்கை முழுவதும் வாழ்வதற்காக அல்ல, வரப்போகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படவே நோவா பேழையை உண்டாக்கினான். நமக்கு கிடைக்கும் வெளிப்பாட்டின் நிமித்தம் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாம் இரவும் பகலும் உழைத்து விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம். 120 வருடங்கள் மட்டும் நோவா தன்னுடைய பொருளையும், பெலத்தையும், நேரத்தையும் மற்றும் எல்லாவற்றையும் செலவழித்து பொp பேழை ஒன்றை உருவாக்கினான். யாராவது நோவாவினிடத்தில், நீ செய்கிற பேழையில் நீ இருக்கப்போகிறாயா? என்று கேட்டால், அவன் நான் அல்ல மழை வரப்போகின்றது, அந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவே இதைச் செய்கிறேன் என்று சொல்லியிருப்பான். ஜனங்களின் பரியாசத்தைக்குறித்து நோவா கவலைப்படவில்லை. தனக்கு கிடைத்த வெளிப்பாட்டிற்காக 120 வருடங்கள் நோவா செலவழித்ததோடு, அதற்காகவே முழுமையாக தன்னை அவன் அர்ப்பணித்தான். அதன் விளைவு என்ன? எல்லா ஜனங்களும் ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோனபோது தேவன் முழு பூமியையும் நோவாவின் கையிலே கொடுத்தார்.


இந்த உலகத்திற்கு வருகின்ற ஆபத்தைக்குறித்ததான வெளிப்பாடு நமக்கு கிடைத்திருக்கின்றது; ஆனால் நாம் அதிலேயே நின்றுவிடக்கூடாது. மற்றவர்களையும் காப்பாற்ற நம்முடைய நேரத்தை, பொருளை அதற்காக செலவிடும்போது பார்க்கிறவர்கள், இது அவசியமில்லாதது, நேரத்தையும் பொருளை வீணாக்குறார்கள், வாலிபத்தை ஏன் வீணாக்குறீர்கள் என்று சொல்லுவார்கள், சாத்தானும் அப்படியே சொல்லுவான். ஆனால், அதன் முடிவோ, தேவனோ நம்மைப் பார்த்து: நீ மற்றவர்களைக் காப்பாற்ற வேலை செய்தபடியினால், நான் உனக்காக நித்தியவீட்டைக் கொடுக்கிறேன் என்று சொல்லுவார். விலைக்கிரயம் செலுத்துவது அர்த்தமானதா? என்று நாம் கேட்போமானால் ஆம் அது அர்த்தமானதே என்பதே உண்மை.

விசுவாசிகளின் தந்தையான ஆபிரகாம்

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான்போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். எபிரேயர் 11:8
ஆபிரகாமுக்கும் தன்னுடைய வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் ஆடுமாடுகள், பொருட்கள், உறவினர்கள், நிலங்கள் மற்றும் தங்கள் சகோதர சகோதாpகளோடு அத்தேசத்தில் நல்லதோர் வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். இந்நிலையில் திடீரென்று தேவன் ஆபிரகாமை நோக்கி: “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போஎன்று அழைப்பு விடுக்கின்றார் (ஆதி 12:1). இந்த வெளிப்பாட்டை ஆபிரகாம் தேவனிடத்தில் பெற்றபின்பு தன்னுடைய தேசத்தை, இனத்தை, தகப்பன் வீட்டை மற்றும் உறவினர்களை விட்டுவிட்டு தேவன் கொடுத்த வெளிப்பாட்டை நோக்கி புறப்பட்டுவிட்டான். வெளிப்பாட்டை பெற்ற ஆபிரகாம் பெரியதோர் விலைக்கிரயத்தையும் செலுத்தவேண்டியதாயிருந்தது. ‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்’ (ஆதி 12:2-4) என்று தேவன் ஆபிரகாமை நோக்கிச் சொன்னபோது அதற்காக ஆபிரகாம் விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயிருந்தது. எனினும், ஆபிரகாம் இந்த காரியத்தில் பின்வாங்காமல் விலைக்கிரயம் செலுத்தியபடியினால் இன்றுவிசுவாசிகளின் தகப்பன்என்று அழைக்கப்படுகின்றான்.
மற்றவர்கள் தங்கள் ஜனங்களோடு, உறவினர்களோடு இருப்பதை நாம் பார்க்கும்போது, நாம் ஏன் வீட்டை விட்டு இவ்வளவு தூரத்திற்குச் சென்று ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உண்டாகின்றது. உறவினர்கள் வாழும் இடங்களில் வாழவே இன்றய நாட்களில் மக்கள் விரும்புகின்றார்கள். அவர்களை விட்டுவிட்டு தூரத்தில் சென்று வசிப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. தங்களது இன்ப துன்ப நேரங்களில் அவர்களின் உதவி தங்களுக்குக் கிடைக்கும்படி அருகிலே வசிப்பதே நலம் என்றே அநேகர் நினைக்கின்றனர். முழு உலகமும் என்னால் ஆசீர்வதிக்கப்படும் என்றால் அதற்காக நான் விலைக்கிரயம் செலுத்த ஆயத்தம் என்ற சிந்தையும் உணர்வும் ஆபிரகாமிடத்தில் காணப்பட்டது. இன்று எல்லாரும் ஆபிரகாமை எங்கள் பிதா என்று சொல்லுகின்றனர். ஆபிரகாமின் மடியே பரதீஷ் என்றும் சொல்லிவந்தனர் (லூக் 16:22). ஆபிரகாமுக்கு இப்படிப்பட்டதான உயர்ந்த ஸ்தானம் எப்படி கிடைத்தது? அவன் விலைக்கிரயம் செலுத்தியபடியினாலே அந்த ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டான்.
ஆபேல் விலைக்கிரயம் செலுத்தினான், இன்றும் பேசிக்கொண்டேயிருக்கின்றான். நோவா விலைக்கிரயம் செலுத்தினான், அவனது கையில் தேவன் பூமி முழுவதையும் கொடுத்தார். ஆபிரகாம் விலைக்கிரயம் செலுத்தினான் ஆனபடியினால், இன்று மக்கள் எல்லாரும் நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கூறுகின்றனர்.

பாடனுபவிக்கப் புறப்பட்ட மோசே

அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்பதிலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எபிரேயர் 11: 25,26
இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவர தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாகிய மோசேயும் தனது வாழ்வில் விலைக்கிரயம் செலுத்தினான். அவன் எகிப்தின் பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். நான் ஏன் தேவ ஜனங்களோடுகூட துன்பத்தை அனுபவிக்கவேண்டும்? என்று அவன் நினைக்கவில்லை. மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி எழும்பினதில்லை என்றும் அவனுடைய பாடல்கள் பரலோகத்திலும் பாடப்படுகின்றன என்றும் நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். விலைக்கிரயம் செலுத்துவதினால் பயனுண்டா என்று நாம் நினைக்கலாம். ஆனால், நிச்சயம் விலைக்கிரயம் செலுத்துவதில் நிச்சயம் பலனுண்டு. ஒருவேளை இன்று நாம் அதை காணமுடியாமல் அதை அனுபவிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம்முடைய வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்துவோமானால் நாமும் அவர்களைப்போல உயர்ந்த ஸ்தானங்களில் தேவனால் வைக்கப்படுவோம்.

விலைக்கிரயம் செலுத்திய வேசி

விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். எபிரேயர் 11: 31
ராகாபை வேதம் இவ்விடத்திலும் வேசி என்றே கூறுகின்றது. அவள் வேசியாய் காணப்பட்டபோதிலும் கீழ்ப்படியாதவர்களோடுகூட சேதமடையவில்லை. அதற்காக அவள் விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயிருந்தது. அவளுக்கு கிடைத்த வெளிப்பாடே அவளை அப்படிச் செய்யவந்தது. அந்த வெளிப்பாட்டினாலேயே அவள் தன்னுடைய ஜீவனையும் பணயம் வைக்க ஆயத்தமாயிருந்தாள். அவள் பிடிக்கப்பட்டிருப்பாளென்றால் அவளது தேசத்தார் அவளைக் கொன்றிருப்பார்கள்;. ஆனாலும், இரண்டு பேருக்கு உதவி செய்யும் படியாக தன்னுடைய ஜீவனை அவள் விலைக்கிரயமாக வைத்து செயல்பட்டாள். அவள் இப்படிப்பட்ட விலைக்கிரயத்தை செலுத்தினதினால், அவளது பெயர் இயேசுவின் வம்சவழி பட்டியலிலும் இடம்பெற்றுவிட்டது (மத் 1:5).

ஆபேல் தவறுசெய்யாதிருந்தும் தனது ஜீவனை அவன் இழக்கவேண்டியதாயிருந்தது. நோவாவுக்கோ தான் பெற்ற வெளிப்பாட்டிற்காக நூற்றிருபது வருடங்கள் கஷ்டப்படவேண்டியதாயிருந்தது. ஆபிரகாமுக்கு தன்னுடைய தேசத்தைவிட வேண்டியதாயிருந்தது. மோசேக்கு தன்னுடைய சுகத்தையும், பொக்கிஷங்களை இழக்கவேண்டியதாயிருந்தது. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கிறோம். ஆனால், விசேஷித்த ஸ்தானத்தை நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதற்காக நாம் விலைக்கிரயம் செலுத்தவேண்டியது அவசியமே. நான் வீணாக என்னுடைய வாலிபத்தை, பொருளை, நேரத்தை, தாலந்துகளை செலவழிக்கிறேன் என்ற சிந்தையை சாத்தான் நம்முடைய மனதில் கொண்டுவரும்போது நாம் அதனை வெற்றிகொண்டு விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமாவோம். மேன்மையான ஸ்தானங்களை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்.



 Written by: சகோ.அகஸ்டின் ஜெபக்குமார்

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.