Sunday 13 April 2014

1 தவிப்பு - ஐந்தாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன்" என்றார் (யோவான் 19:28)


தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையை யோவான் எழுதும் முன்பாக இயேசு ஏதோ ஒன்றை அறிந்து அதன் பின் இந்த வார்த்தையை சொன்னதாக எழுதுகிறார். இயேசு என்னதை அறிந்து கொண்டார் என்று பார்க்கும் பொழுது அவர் எல்லாம் முடிந்தது என்று அறிந்து என்று இந்த வசனம் சொல்கிறது.ஆனால் இயேசுகிறிஸ்து சொன்ன ஏழு வார்த்தைகளில் முடிந்தது என்பதும் ஒரு வார்த்தை உள்ளது.ஆனால் இயேசு இந்த இடத்தில் எல்லாம் முடிந்தது என்று அறிந்து தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

இயேசுகிறிஸ்து மட்டும் தான் என்ன நோக்கத்துக்காக உலகத்தில் அவதரித்தாரோ அதில் ஒரு அச்சும் கூட பிசகாமல் அதை சாதித்து முடித்தார்.
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்.
அப்படியானால் அந்த வேத வாக்கியம் என்ன?

சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

இயேசுகிறிஸ்து வேத வாக்கியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உண்ணும் போஜனமும்,அவருடைய தாகத்துக்கு தகுந்த தண்ணீரும் எதுவாக இருக்கும் என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால்,வேத வசனம் இப்படியாக சொல்லுகிறது

யோவான் 4:34 இயேசு அவர்களை நோக்கி, நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடையகிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக உள்ளது, இயேசுவின் தாகம் பிதாவின் சித்தம் செய்யப்படுவதே.அப்படியானால் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை அச்சடையாளமாக கொண்ட திருச்சபையே இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்ன செய்துவருகிறோம்.பிதாவின் சித்தத்தை நாம் உணர்ன்து இருக்கிறோமா?

கீழே உள்ள வசனங்கள் பிதாவின் சித்தம் என்ன என்று நமக்கு அழகாக காண்பிக்கின்றது.

மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளைஎழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

இதுவே பிதாவின் சித்தம்.இதை நிறைவேற்றுகிறவனே இயேசுவின் தாகத்தை தீர்க்கமுடியும்.உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் என்பதே பிதாவின் சித்தம்.அப்படியானால் அந்த ஆத்துமாக்களை நேசிக்கிறவன் இயேசுவுக்கு சாப்படு கொடுக்கிறவனாக,தண்ணீர் கொடுக்கிறவனாக காணப்படுவான் என்று இயேசு சொல்லுகிறார்.

மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

அப்பா உம்முடைய சித்தத்திற்கு என்னை ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?







நன்றி:இயேசு நேசிக்கிறார் (agwjja)
Gnana Wilson

1 comments:

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.