Sunday 13 April 2014

0 ஒப்புவிப்பு - ஏழாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)


ஆறு வார்த்தைகளையும் மகாவேதனையின் மத்தியில் கூறிய இயேசு, ஏழாவது வார்த்தையாக தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவராய் பூரண திருப்தியுடன் பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்புவிக்கின்ற வார்த்தையை கூறுகின்றார். ஏழு என்னும் இலக்கம் பரிபூரணத்தை குறிக்கிறது, ஆகவே அவர் கூறிய ஏழாவது வார்த்தை மிகவும் பரிபூரணமான வார்த்தையாக காணப்படுகிறது.


இங்கு ஒன்றை கவனிப்போமானால் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார் என வேதம் கூறுகிறது. ஏன் இயேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்? பிதா எப்பொழுதும் அவருரோடே கூட இருந்தவர் மெதுவாய் அல்லது மனதிற்குள் சொன்னால் பிதாவிற்கு தெரியாதா? அல்லது விளங்காதா? ஏனெனில் தான் ஜீவனை விடுகின்ற அந்த தொணி ஏரோதிற்கு கேட்க வேண்டும், தன்னை ஏற்காதா இஸ்ரவேலருக்கு கேட்க வேண்டும், ஏன் இன்னும் இரண்டாயிரத்தி ஏழு வருடங்கள் கழிந்தும் தன்னை ஏற்காத, தன்னை மறுதலிக்கின்ற ஜனங்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே. யோவான் 10:17 18 ஆம் வசனம் இப்படி கூறுகின்றது

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதை கொடுக்கிற படியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதை கொடுக்கிறேன் அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. ஆகவே இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதனும் தன் ஆவி பிரிவதை அறியான். ஒரு வேளை நான் மரிக்கப் போகின்றேன் என்பதனை ஒருவன் உணரலாம் ஆனால் அது எப்பொழுது என்பது எந்தக் கணப்பொழுதில் என்பது அவனுக்கு தெரியாது ஏனெனில் தேவன் தான் ஜீவனைத்தருகின்றார் அவரே அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றர்ர். ஆனால் இயேசு கிறிஸ்து தெய்வம் என்ற படியினால் தன் ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுத்தார் என்பதனை இங்கு காண்கிறோம்

இயேசுவிற்கு எத்தனையோ விதமான தண்டணைகளை, ஆக்கினைகளை அன்று கொடுத்தார்கள். ஆனால் யாராலும் அவரின் உயிரை எடுக்க முடியவில்லை. ஜீவனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் உண்டு, என அவர் சொன்ன வார்த்தையின் பிரகாரம் பிதாவின் கரத்திலே தனது ஆவியை ஒப்புக்கொடுத்தார். மறுபடியும் பிதாவின் கரத்திலிருந்து மூன்றாம் நாளில் தனது ஆவியை பெற்றுக்கொண்டார். மத்தேயு 3:16 ஆம் வசனத்திலே இயேசு ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு வானம் திறக்கப்பட்டது என வேதத்தில் காண்கிறோம்

இங்கு நமது ஆதி பெற்றோர்களாகிய ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையினால் அடைக்கப்பட்ட வானம் பிந்திய ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்படிவினால் அதாவது ஞானஸ்நானம் எடுத்து கரையேறினவுடனே அவருக்கு திறக்கப்பட்டது. மீண்டும் சிலுவையிலே ஜெபத்துடன் தன்னுடைய ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது புத்திரசுவிகாரர்களாய் நாங்கள் யாவரும் பரத்துக்குச் செல்லும் பாதை திறக்கப்பட்டது. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகள் திறந்தது நித்திரையடைந்த அனேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. இதிலே முக்கியமாய் கூறப்போனால் நூற்றுக்கு அதிபதியும் அவனோடே கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும் நடந்த சம்பவங்களை கண்டு இவர் மெய்யாய் தேவனுடைய குமாரன் என அறிக்கை செய்தார்கள்.


II கொரிந்தியர் 6:2 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம் அவர் சிலுவையில் எவ்வளவாக அவர் பிதாவின் சித்தம் செய்ய தன்னை அர்பணித்திருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது. இன்றைக்கு நாம் இயேசுவுக்காக துக்கம் கொண்டாடாமல் இயேசு லுூக்கா 23:28 ல் சொன்னது போல்

இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி, எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லுூக்கா 23:28


இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார். கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.








நன்றி:இயேசு நேசிக்கிறார் (agwjja)
Gnana Wilson

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.