Thursday 18 July 2013

0 நட்ட கல் பேசுமா?

கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று என்ன தெரியுமா?
சிலை வணக்கம்! ஏன், அவருக்கு அது பிடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்குக் தெரியுமா? அவர் சொல்லியிருக்கிறார், மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான எந்த உருவத்தையாகிலும், யாதொரு விக்கிரத்தையாகிலும் வைத்து அவரை வணங்கக்கூடாதென்று (யாத் 20:7). ஏன், அவர் அப்படிச் சொன்னார்?  
தன்னுடைய மகிமையை எதனோடும் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்று கடவுள் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இருந்தாலும், சிலை வைத்து வணங்குவது எங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுவது எனக்குப் புரிகிறது. கடவுளை வணங்குகிற விஷயத்தில் நாம் மனுஷத்தனமாக சிந்திப்பது உதவாது. கடவுள் நம்மைவிடப் பெரியவர். எல்லாவற்றையும் படைத்தவர். அவரைவிட பெரியது ஒன்றுமில்லை
அவருக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அவருக்கு உருவமில்லை. காலங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. ஒரே நேரத்தில் அவர் எங்கும் இருக்கிறார். இடங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் மனிதர்களாகிய நாம் நமது மூளையை வைத்து அவரை அறிந்து கொள்ளுவது கொஞ்சம் கஷ்டம்தான். நம்முடைய மூளையைப் பயன்படுத்தி நாம் எத்தனையோ பெரிய காரியங்களை இந்த உலகத்தில் செய்தாலும் ஞானத்தின் தேவனாகிய கடவுளை நம்முடைய சிறிய மூளையை வைத்து அறிந்துகொள்ள முடியாது
அதனால்தான் நாம் சிலைகளை வைத்து அவரை வணங்க ஆரம்பித்து விடுகிறோம். நமக்குத் தெரிந்தபடி அவரைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறோம். அங்கேயே நாம் தவறு செய்கிறோம். நமக்குத் தெரிந்த விதத்தில் அவரை வணங்கப்பார்க்காமல் கடவுள் அதுபற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று நாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நாம் நினைத்தவிதத்தில் அவரைத் திருப்திப்படுத்தப் பார்க்காமல் அவருக்கு எது பிடிக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடவுளைப் பொறுத்தவரையில் சிலை வைத்து அவரை வணங்குவதில் இரண்டு தவறுகள் இருக்கின்றன.
1.   சிலை மூலம் அவரை வணங்கும் போது நாம் அவரை நிராகரித்து விடுகிறோம். அதாவது, அவர் ஜீவனுள்ள, உருவமற்ற கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். சிலையே வைக்காதே! என்று அவர் சொல்லியிருக்கும் போது சிலை மூலம் அவரை வழிபடப் பார்ப்பது அவரை நிராகரிப்பதற்கு சமமானதுதானே.

  சிலை மூலம் அவரை வழிபடும்போது நாம் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை உயிரில்லாத சிலைக்கு கொடுத்துவிடுகிறோம்.
இந்த இரண்டையும் கடவுள் நம்முடைய அறியாமையின் அடையாளங்களாகப் பார்க்கவில்லை. அறியாமையால் இப்படி செய்துவிட்டோம் என்று அவரிடம் நாம் சொல்லித் தப்பிவிட முடியாது. அவர் இந்த இரண்டையும் கொடிய பாவங்களாகப் பார்க்கிறார். மகா பரிசுத்தமும், சர்வத்தையும் படைத்த மகாவல்லவருமான அவரை அவரால் படைக்கப்பட்ட சாதாரண பொருட்களோடு ஒப்பிடுவது அவரை குறைவுபடுத்துகிற இழி செயலாக அவர் பார்க்கிறார்
ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து அந்தப்படத்தில் நாம் மாற்றங்களை செய்து அவரிடம் காட்டினால் அவர் முகம் வாடிவிடும் இல்லையா. ஏன்? அவரை நாம் கேலி செய்கிறோம் என்பதால்தான். சாதாரண மனிதனுக்கே அது பிடிக்காமல் இருக்கிறபோது சர்வ வல்லவரான நம்மைப் படைத்த கடவுளைக் கேலி செய்வது அவருக்கு பொருக்குமா? இதனால்தான் சிலை வணக்கத்தைக் கடவுள் அருவருப்போடு வெறுக்கிறார்.
இப்படியெல்லாம் நான் கேள்விப்பட்ட தில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் தவறுதான். அறியாமையை வைத்து கடவுளிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே. நம் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த சித்தர் பரம்பரைக்கே இது தெரிந்திருக்கிறது, நீங்கள்தான் எதையும் சிந்தித்துப் பார்க்காமல் பாவத்தை செய்து வருகிறீர்கள். ஒரு சித்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
 “நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பஞ் சாத்துகிறீர்

சுத்தி வந்து முணு முணுவென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கறிச் சுவை அறியுமோ?”

இது நம்நாட்டு சித்தர் பாடல். அவர்களுக்கு கூட சிலை வைத்து கடவுளை வணங்குவது அறிவுக்குறைவான செயல் என்று தெரிந்திருந்தது. உயிரில்லாத கல் எப்படிப் பேசும்? அதற்குக் கறிச்சுவை எப்படித் தெரியும்? என்று சித்தர்கள் ஆணித்தரமாக கிண்டலாகக் கேட்டிருக்கிறார்கள்.
சரி, சர்வ வல்லவரான கடவுளை நீங்கள் எப்படி வணங்க வேண்டும்? அவரை அறிந்துகொள்ள முடியாமல் நிற்கும் நீங்கள் அவரை அறிந்துகொண்டு வழிபட வேண்டுமென்பதற்காகத்தான் அவர் மனித உருவத்தில் முழுத் தெய்வீகத்தோடு இயேசு கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிறந்தார். இயேசு கிறிஸ்துவை கடவுளாக வழிபடும்போதுதான் உங்கள் வழிபாட்டைக் கடவுள் ஏற்றுக்கொள்ளுகிறார். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயேசு கிறிஸ்துவின் வேதப் புத்தகத்தை வாசித்து அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்
அவரைக் கடவுளாக விசுவாசிக்க வேண்டும். பாவங்களிலிருந்து நீங்கள் முழுமையாக விடுதலை பெற அவர் உங்கள் பாவங்களைத் தன்மேல் தாங்கிப் பலியானார் என்பதை முழுமனதோடு விசுவாசித்து அவரிடம் நீங்கள் பாவ மன்னிப்பு பெற வேண்டும். ஜெபித்து, ஆண்டவரே! என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மன்றாட வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவர் அழிவில்லாத பரலோக வாழ்க்கையைக் கொடுக்கிறார் என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. சிலை வணக்கத்தை நிறுத்திவிட்டு கிறிஸ்து இயேசுவை இன்றே விசுவாசியுங்கள்.
  நன்றி:biblelamp.me

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.