Sunday 19 October 2014

0 நடிகர் சாருஹாசன் - சாட்சி

எல்லோருக்கும் நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்?
நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த சகோதரன். சுஹாசினி அவர்களின் தந்தை.மணிரத்தினத்தின் மாமனார். இவரது சிறப்பு அம்சம் என்னென்ன என்று கேட்பீர்கள் என்றால், சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களில் முப்பது** ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.அப்படியானால் ஒரு தலைமுறைக்கு முன்பே கல்வி அறிவு கொண்ட மூத்த கல்வியாளர். பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் வேதங்கள் நான்கையும் முறையாக கற்றுத் தேறியவர் மட்டுமல்ல சில காலங்களுக்கு முன்புவரை அதை பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தவர்.

சமஸ்கிரித மொழியை முறையாக கற்றுத் தேறிய பண்டிதர் மட்டுமல்ல நீண்ட நெடிய காலமாக சமஸ்கிரித ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்துபவர். கோயில் வழிபாடுகளில் உள்ள அத்தனை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தவர். திரைப் படங்களில் அவர் ஏற்கும் வேடங்களில் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கோவில் அர்ச்சகராக அல்லது வேதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக,சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக எதோ ஒரு வகையில் மதம் சார்ந்த பாத்திரமாகவே ஏற்று நடிப்பார்.அப்படியான பாத்திரங்களையே அவர் விரும்புவார் என்றும் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். சிறந்த நடிப்புக்காக மாநில மற்றும் தேசிய விருது வாங்கியவர்.

இந்து மத வழிபாட்டை,வேதங்களை எல்லாம் முறையாக பயிற்றுவிப்பவர் என்று மட்டுமல்லாது அதையே வாழ்வியலிலும் கடைபிடித்து வந்த மனிதர். கமலஹாசனைக் குறித்தும் அவரது வாழ்வைக் குறித்தும் குறிப்பாக அவரது திருமண சச்சரவுகள் குறித்தும் எப்போதும் கடுமையான விமர்சனங்கள் கொண்ட மனிதர்.அதாவது அவரைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறையை வைத்திருந்த மனிதர்.இவர் அடிப்படையிலேயே நல்ல வசதியானவர் தான். பணத்துக்கான தேவை என்பது அதிகம் இவருக்கு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு பூர்வீகத்தை கொண்ட மனிதர்,அதுவும் ஒரு பிராமண குடும்பதை சேர்ந்த தீவிரமாக மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர், கொஞ்ச காலத்துக்கு முன்பு கிறித்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரை யாராவது ஏமாற்றி மதம் மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது அப்படி யாராவது வித விதமாய் பேசி ஏமாற்ற நினைத்தாலும்,
ஏமாறும் மனிதரா அவர்?

கடந்த ஆண்டு இவர் எப்படி கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்ற சாட்சி ஒன்றை பார்க்க்க நேர்ந்தது.உண்மையில் மிகுந்த நெகிழ்வான சாட்சியாக அது இருந்தது.வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்து வந்திருக்கிறார்.கிறித்துவத்தை உடனே எல்லாம் அவர் ஏற்கவில்லை. அதை ஏற்பதற்கு முன் பல ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து வந்திருக்கிறார். அதில் தெளிவு கிடைக்காமல் அவர் கிறித்துவத்தை ஏற்கவில்லை என்கிறார்.

சாதாரணமாக கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களுக்கு கூட இந்த அளவுக்கு வேதாகமத்தை குறித்த வாசிப்பு அனுபவம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு ஆழ்ந்து வாசித்து, வேதகாம வார்த்தைகளை ஞாபகத்தோடு பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒரு தொலைக்காட்சி நாடகம் போலவே கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார். கோவில்கள் சொல்லப்படும் சமஸ்கிரித ஸ்லோகங்கள் பலவற்றுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன, அவை எதைக் குறிக்கின்றன,பரிசுத்த வேதாகமத்துக்கும் இந்த ஸ்லோகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எல்லாம் மிக தெளிவாக விளக்கி சொல்கிறார்.பலவேறு ஆச்சயர்யமான விடயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருவேளை அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்த நண்பர்கள், அவர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சரிதானா ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவராக மாறிவிட்டால் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. அப்படி பெயர்மாற்றினால் தான் கிறித்துவர் என்ற நிபந்தனையும் கிடையாது.

அவரது சாட்சி குறுந்தகடாகவும் வெளி வந்து இருக்கிறது. யூடியூபிலும் கூட காணக் கிடைக்கிறது.பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம். இவரைப் போன்ற பலர் இப்படியாக கிறித்துவை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பெரும் பெரும் பணக்காரர்கள்,
எவ்வித பொருளாதார நெருக்கடிக்கோ, துன்பங்களுக்கோ ஆட்படாத மனிதர்கள் பலர் மாறி இருக்கிறார்கள். சாருஹாசன் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது!இந்த வயதில் அவர் கிறித்துவராக மாற வேண்டிய அவசியம் என்ன? பணத்துக்காகவா?

பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். சினிமாவில் இன்னொருவரை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பழைய .வி.எம் ராஜனை சொல்லலாம். அவரும் கூட பல திரைப் படங்களில் கோவில் அர்ச்சகராக, அல்லது கடவுள் பயம் போன்ற விடயங்களை சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர். காசு பணத்துக்கு பஞ்சம் இல்லாத மனிதர் தான்.

ஆக நான் சொல்லவரும் செய்தி என்னவென்றால் இங்கே எல்லோரும் பணம் கொடுத்து தான் மதம் மாற்றுகிறார்கள்/மாறுகிறார்கள் என்ற குற்றசாட்டை முழுமையாக ஏற்க இயலாது.
அப்படி செய்வதாக இருந்தால் சாருஹாசன் போன்ற பின்னியை கொண்ட மனிதர்கள் எல்லாம், ஏசுவை ஏற்றுக் கொண்டிருக்க்கவே முடியாது. ஒருவேளை அப்படி யாராவது பணம் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றால் அது தவறு. அப்படி பணத்துக்காக மாறுபவர்கள் உண்மையான கிறித்துவர்களாகவும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தனை நாள் இந்துவாக இருந்த போது,இந்தியராக கருதப்பட்ட சாருஹாசன், கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட படியால்,இனி அவரும் அந்நிய நாட்டு கைக்கூலி,அமெரிக்க அடிமை என்றெல்லாம் புதுப்பட்டம் வாங்குவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

இங்கே யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மதமும் கடவுளை இல்லை என்றோ வேண்டாம் என்று கூட சொல்லலாம். அதுவல்ல பிரச்சினையும்,விவாதமும்!

ஸ்லோகங்களும்,அதற்கான விளக்கங்களும் குறித்த சாருஹாசனின் காணொளி இணைப்பு ஒன்று கீழே!


காணொளி http://www.youtube.com/watch?v=iqBtFoO7sFE 



  நன்றி : http://vasanam.blogspot.in

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.